அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 150 லிட்டர் இரத்தம் தானம்!


ரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து  ஐந்து வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை இந்த ஜமாஅத் செய்து வருகின்றது.  தற்போது உலகம் முழுவதிலிருமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா மாநகருக்கு வந்திருப்பதால்  அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையினர் (KFMC) ரியாத் TNTJ-விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற ரியாத் TNTJ, கடந்த 19.10.2012 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் 21 ஆவது இரத்த தான முகாமை நடத்தியது. இது ஹஜ் பயணிகளுக்காக (தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும்) நடத்தப்பெறும் 6 ஆவது முகாம் ஆகும்.

இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை  9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி  போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. அதிகபட்சமாக 150 லிட்டருக்கும் மேல்
இரத்தம் பெறப்பட்டது இதுவே முதல் முறை.

இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்களான சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் களப்பணியாற்றிய தொண்டர் அணியினர், கிளை  நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.  ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல/கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி  சுமார் 20 வாகனங்களில் கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வரும் வண்ணமாயிருந்தனர்.

இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5 - 6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டி, தொண்டரணியிலும், வாகன சேவையிலும்  தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிரியா  நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கஷ்மீர், உ.பி., ஹார் மற்றும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
 
ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பிரத்தியேகமாக பேனர்கள் தயாரித்து மருத்துவமனையின் பல இடங்களில் வைத்திருந்தனர்.

வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!







ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.